வினாத்தாள் கசிவு காரணமாக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள மன உளைச்சலுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என காங்கிரஸ் கமிட்டி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதை கண்டித்தும், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி மீதான கைது நடவடிக்கையை கண்டித்தும் சென்னை அண்ணா சாலை தாராப்பூர் டவர் அருகே காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் அருள் பெத்தையா, நீட் உள்ளிட்ட தேர்வுகளில் பாஜக அரசு தொடர்ந்து முறைகேடுகளை செய்து வருவதாகவும், வினாத்தாள் கசிவு குறித்து நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி தொடர்ந்து குரல் எழுப்பி வருவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்திய அவர், வினாத்தாள் கசிவு காரணமாக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள மன உளைச்சலுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
