தவெக அரசு ஆட்சி அமைத்ததிலிருந்து அதிக விமர்சனத்திற்கு உள்ளாகும் துறையாக மின்சார துறை இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது, அடித்தட்டு மக்களை நேரடியாக பாதிக்கும் மின்தடை விவகாரமாகும். இதனை கையில் எடுத்த எதிர்கட்சிகள் தவேக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த விவகாரம் ஒரு பக்கம் இருக்க, மற்றொரு புறம் மின்சார துறையின் தலைமையகத்தில் இருந்து ஹார்ட் டிஸ்க்குகள் திருடப்பட்ட சம்பவம் பூதாகரமாக மாறியது. கடந்த ஆட்சியில் விடப்பட்ட டெண்டர்கள் தொடர்பான முக்கியமான தகவல் அடங்கிய ஹார்ட் டிஸ்க்குகள் திருடப்பட்டதாக தகவல் கசிய தமிழக அரசியலில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஜூன் மாதம் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஹார்ட் டிஸ்களை திருடிய தனியார் ஒப்பந்த ஊழியர் கோபிநாத் மற்றும் பெங்களூரை சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். இதனைதொடர்ந்து திருடப்பட்ட 34 ஹார்ட் டிஸ்க்குகள் மீட்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஹார்ட் டிஸ்க்குகள் திருட்டு சம்பந்தப்பட்ட மின்வாரித்துறை அதிகாரிகளிடம் சிபிசிடி போலீசார் விசாரணை நடத்திய போது, அவர்கள் கூறிய தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். மின்வாரிய துறையின் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அலுவலக சம்பந்தப்பட்ட தொடர்பான தகவல் மட்டுமே திருடு போன ஹார்ட் டிஸ்கில் இருந்தது என்றும், மிக முக்கியமான டெண்டர் விவரங்கள் அடங்கிய கோப்புகளோ அல்லது தகவல்களோ அல்லது மின்வாரிய துறையில் எடுக்கப்படும் முக்கியமான முடிவுகள் குறித்தான எந்த தகவலும் திருடப்பட்ட 34 ஹார்ட் டிஸ்க்களும் கிடையாது என்றும், மின்வாரிய அதிகாரிகள் கையை விரித்ததால் சிபிசிஐடி போலீசார் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். முக்கியமில்லாத அன்றாட நடவடிக்கைகள் அடங்கிய தகவல் என்றாலும், அவற்றை முழுவதுமாக பார்மட் செய்து அழித்துவிட்டு கோபிநாத் விற்பனை செய்திருப்பதால், அழிக்கப்பட்ட விவரங்கள் என்னென்ன என்பதை மீட்டெடுப்பதற்காக 34 ஹார்ட் டிஸ்க்களையும் டேட்டா ரெகவரிக்காக தமிழ்நாடு தடயவியல் துறைக்கு அனுப்பி அவற்றை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒன்றுமே இல்லாத தகவலுக்காக இவ்வளவு அக்கப்போர் என மின்வாரிய துறை அதிகாரிகள் தலையில் அடித்துக் கொண்டு சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் வேலை பார்த்து வருதாக கூறப்படுகிறது.




