க்ரைம்
Trending

செந்தில் பாலாஜி கைதாகிறார்? டாஸ்மாக் ஊழல் வழக்கு புகாரில்

முன்னாள் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி உட்பட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளால் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் அவர் கைது செய்யப்படுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னாள் அமைச்சரை கைது செய்ய ஆளுநர் அனுமதி வேண்டும் என்பதால் முதல்வர் விஜய் தரப்பு ஆளுநரிடம் இதற்காக அனுமதி கேட்க வாய்ப்புகள் உள்ளது.

இந்த வழக்கிலும்.. செந்தில் பாலாஜி முன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்யவும் வாய்ப்புகள் உள்ளன. தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் நிறுவனத்தின் செயல்பாடுகளில் பல நூறு கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடுகள் மற்றும் ஊழல் நடைபெற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, முன்னாள் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி உட்பட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது கோயம்புத்தூர் தெற்கு எம்எல்ஏவாக இருக்கும் செந்தில் பாலாஜியுடன் சேர்த்து, டாஸ்மாக் முன்னாள் மேலாண் இயக்குனர் விசாக்கன் ஐ.ஏ.எஸ்., முன்னாள் மேலாளர்கள் ராமதுரைமுருகன், பன்னீர்செல்வம், செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் பாஸ்கர் மற்றும் அவருக்கு நெருக்கமான ரதேஷ்ராஜ், கரூர் கார்த்திக் ஆகியோரின் பெயர்களும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளன.

திட்டமிட்டு நடத்தப்பட்ட முறைகேடுகள்?
தமிழ்நாடு முழுவதும் சுமார் 1,380 அரசு சில்லறை விற்பனை மதுபானக் கடைகளும், அவற்றின் அருகே சுமார் 1,340 பார்களும் செயல்பட்டு வருகின்றன. டாஸ்மாக் நிறுவனம் ஆண்டுதோறும் ஒட்டுமொத்த மது விற்பனையில் பெருமளவில் வருவாய் ஈட்டி வந்தபோதிலும், பார்களுக்கான உரிமம் மற்றும் டெண்டர்கள் மூலம் கிடைக்கும் வருவாய் மிகக் குறைவாக பதிவாகியிருந்தது. இதில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், பல ஆண்டுகளாகத் திட்டமிட்டு முறைகேடுகள் நடத்தப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

குறிப்பாக கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மற்றும் கரூர் உள்ளிட்ட மேற்கு மண்டல மாவட்டங்களில் பார் உரிமைகளுக்கான டெண்டர் நடைமுறைகளில் தீவிர முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. அங்குள்ள 237 டாஸ்மாக் பார்களுக்கான டெண்டர் செயல்பாட்டின் போது, ஒரே வங்கி கிளையிலிருந்து அடுத்தடுத்த வரிசை எண்களைக் கொண்ட வங்கி டிடி தாக்கல் செய்யப்பட்டதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இதன்மூலம், டெண்டர்களை குறிப்பிட்ட சில நபர் அல்லது குழு மட்டுமே கைப்பற்றும் வகையில் முறைகேடுகள் ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது.

சட்டவிரோத பார்கள் மற்றும் அரசுக்கு ஏற்பட்ட பெரு இழப்பு
டாஸ்மாக் விதிமுறைகளின்படி, பார் நடத்துபவர்கள் செலுத்த வேண்டிய மாதாந்திர உரிமக் கட்டணத்தை டிடியாக செலுத்தாவிட்டால், உடனடியாக அந்த பார் மூடப்பட்டு மீண்டும் புதிய டெண்டர் விடப்பட வேண்டும். ஆனால், அரசு அதிகாரிகளுடன் சேர்ந்து கொண்ட ஒப்பந்ததாரர்கள், உரிமத்தைப் புதுப்பிக்காமலேயே தொடர்ந்து பார்களை இயக்கி வந்துள்ளனர்.

ஆய்வின்போது, குறிப்பிட்ட மண்டலத்தில் உள்ள 657 பதிவு செய்யப்பட்ட பார்களில், 184 பார்கள் மூடப்பட்டுவிட்டதாக அரசு ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், கள நிலவரத்தில் அந்த பார்கள் அனைத்தும் எவ்வித கட்டணமும் உரிமமும் இன்றி சட்டவிரோதமாக தொடர்ந்து செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இந்த முறைகேடுகளால் 2022-2023 நிதியாண்டில் மட்டும் அரசுக்கு மிகப் பெரிய நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது:

கோவை வடக்கு: ரூ. 1,227 கோடிக்கும் அதிகமான வருவாய் இழப்பு
கோவை தெற்கு: ரூ. 11.58 கோடிக்கும் அதிகமான வருவாய் இழப்பு
நீலகிரி: ரூ. 195 கோடிக்கும் அதிகமான வருவாய் இழப்பு

சரக்கு போக்குவரத்து டெண்டர்களிலும் தில்லைமுல்லு?
டாஸ்மாக் பார்கள் மட்டுமின்றி, மதுபானங்களை சேமிப்புக் கிடங்குகளில் இருந்து கடைகளுக்குக் கொண்டு செல்லும் சரக்கு போக்குவரத்து ஒப்பந்தங்களிலும் பெருமளவில் நிதி முறைகேடு நடந்துள்ளதாக வழக்கு பதியப்பட்டு உள்ளது. மாநிலத்தில் உள்ள 43 அதிகாரப்பூர்வ டாஸ்மாக் கிடங்குகளுக்கான போக்குவரத்து டெண்டரில் இந்த மோசடி அம்பலமானது.

உதாரணமாக, ரவிச்சந்திரன் என்பவர் 16 கிடங்குகளுக்கான போக்குவரத்து ஒப்பந்தங்களைப் பெற தலா ரூ.50,000 மதிப்பிலான 16 வங்கி வரைவோலைகளைச் சமர்ப்பித்துள்ளார். ஆனால், அவருக்கு ஒரே ஒரு கிடங்கிற்கு மட்டுமே ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

ரத்து செய்யப்பட்ட மீதமுள்ள 15 டிடிக்களில் 6 மட்டுமே அவருக்குத் திரும்பக் கிடைத்தன.. எஞ்சிய 9 வரைவோலைகள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டு வேறு நபர்களுக்குத் திருப்பி விடப்பட்டன. இதுமட்டுமன்றி, போக்குவரத்து ஒப்பந்தங்களுக்காக டாஸ்மாக் ஆண்டுதோறும் செலவிடும் சுமார் ரூ.100 கோடியில் பரவலான நிதி மோசடிகள் நடந்துள்ளதாக அரசு ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

தற்போது லஞ்ச ஒழிப்புத் துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு, டாஸ்மாக் நிர்வாகத்தின் மீதான சந்தேகங்களை அதிகரித்துள்ளதுடன், செந்தில் பாலாஜி கைதாக வாய்ப்புள்ளதா என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button