க்ரைம்
Trending

அறநிலையத்துறை புதிய நடவடிக்கை: கோயில் கார் பார்க்கிங் கட்டணங்களுக்கு இனி டிஜிட்டல் பில் மட்டுமே வழங்கப்படும்..

தமிழகத்தில் உள்ள கோயில்களில் கார் பார்க்கிங் வசதிகளுக்காக வசூலிக்கப்படும் கட்டணங்களுக்கு இனி முழுமையாக டிஜிட்டல் முறையில் மட்டுமே ரசீதுகள் வழங்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

கோயில் நிர்வாகங்களில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் வகையில் பல்வேறு புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர், கார் பார்க்கிங் கட்டண வசூல் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் கண்காணிக்கப்படும் வகையில் டிஜிட்டல் மயமாக்கப்பட உள்ளதாக கூறினார்.

மேலும், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் நடைபெறும் அனைத்து வகையான டெண்டர் பணிகளும் இனி ஆன்லைன் மூலமாக மட்டுமே மேற்கொள்ளப்படும் என்றும், இதன் மூலம் ஒப்பந்த நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும் என்றும் அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.

ஆன்லைன் டெண்டர் முறையால் போட்டி வாய்ப்புகள் அதிகரிப்பதுடன், நிர்வாகத்தில் நேர்மை மற்றும் வெளிப்படையான செயல்பாடு மேம்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, பழனி கோயில் தொடர்பான விவகாரத்தில் தன் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கம் கொண்டவை என அமைச்சர் ரமேஷ் விளக்கம் அளித்துள்ளார். அரசியல் சுயலாபத்திற்காகவே சிலர் தேவையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாகவும், அவற்றில் உண்மை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அறநிலையத்துறையின் செயல்பாடுகளை மேலும் நவீனப்படுத்தும் வகையில் டிஜிட்டல் வசதிகள் தொடர்ந்து விரிவுபடுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button