
பிரபல மாடல் அழகி கால்வாய் அருகே கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தில் குற்றவாளி யார் என தெரியாமல் திணறி வரும் போலீசார்..? மாடல் அழகியை அழைத்து சென்றது யார்? ஷூட்டிங் ஸ்பாட்டில் என்ன நடந்தது…?
அரியானா மாநிலம் பானிபட் பகுதியை சேர்ந்தவர் தான் ஷீத்தல். இளம் மாடல் அழகியான இவர் கடந்த ஜூன் 14ம் தேதி இசை ஆல்பம் ஒன்றில் நடிப்பதற்காக அஹார் கிராமத்திற்கு ஷூட்டிங்கிற்காக சென்றுள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து பேசிய ஷீத்தல், அடுத்த 2 நாட்களாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பயந்துபோன ஷீத்தலின் சகோதரி நேஹா காவல்நிலையத்திற்கு விரைந்தார்.
நேஹா அளித்த புகாரில், பாடல் ஷூட்டிங்கிற்காக அஹார் பகுதிக்கு சென்ற ஷீத்தலை காணவில்லை என்று கூறி அழுதுள்ளார். இதனால், ஷீத்தலை காணவில்லை என வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை நடத்தியுள்ளனர். அப்போது ஷீத்தலின் உடல் காந்தா கிராமத்தில் உள்ள கால்வாயில் கிடைப்பதாக தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தியதில், ஷீத்தல் கழுத்தறுக்கப்பட்டு இறந்தது தெரிய வந்தது. இதனால், மாடல் அழகி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.
அதில், ஷீத்தல் பாடல் ஷூட்டிங்கிற்காக சென்றபோது அவரை ஒருவர் பின் தொடர்ந்தது தெரிய வந்துள்ளது. கடைசியாக அந்த நபருடன் காரில் போனபோது தான் ஷீத்தலை கடைசியாக பார்த்ததாக சிலர் போலீசாரிடம் கூறியுள்ளனர். இதேநேரம் ஷீத்தல் இறந்து கிடந்த கால்வாயில் கார் ஒன்றும் மூழ்கியுள்ளது. அதில் இருந்த சுனில் என்பவர் தப்பித்து உயிருக்கு போராடி கொண்டிருந்த நிலையில், அவர் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சுனில் பற்றிய பகீர் தகவல்களை ஷீத்தலின் அக்கா நேஹா சொல்லி இருக்காங்க. சுனில் மீது 6 மாதங்களுக்கு முன்பே நேஹா காவல்நிலையத்தில் புகார் அளித்து இருக்காங்க. மாடலான ஷீத்தல் ஷூட்டிங் ஒன்றில் பங்கேற்பதற்காக கர்னல் பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்கியுள்ளார். அப்போதுதான் ஷீத்தலுக்கும், சுனிலுக்கும் பழக்கமாகி உள்ளது. ஆரம்பத்தில் நட்பாக பழகிய இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதால், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ஷீத்தலை சுனில் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
திருமணம் பேசும்போது, சுனில் குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்று ஷீத்தலுக்கு தெரிய வந்து இருக்கு. அதாவது, சுனில் ஏற்கெனவே திருமணமானவர் என்றும், அவருக்கு இரு குழந்தைகள் இருப்பதும் தெரிய வந்ததால் அவரை திருமணம் செய்ய மறுத்த ஷீத்தல், சுனிலை விட்டு விலகி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுனில், ஷீத்தலை விடாமல் துரத்தி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தொந்தரவு கொடுத்துள்ளார். சுனில் கண்ணில் படாமல் ஷீத்தல் மறைந்து ஷீட்டிங் சென்ற போது தான் அங்கும் சுனில் தேடி வந்துள்ளார். கடைசியாக சுனிலுடன் சென்ற ஷீத்தல் இறந்து கிடந்துள்ளார்.
இதனால், ஷீத்தலின் மரணத்திற்கு சுனில் தான் காரணம் என அவரது அக்கா நேஹா புகார் கூறி உள்ளார். இதேநேரம், ஷீத்தல் உடல் கிடைத்த இடத்தில் சுனிலும் உயிருக்கு போராடி கொண்டிருந்ததால், நடந்த கொலைக்கு யார் காரணம் என்பது போலீசாரின் கேள்வியாக உள்ளது. ஷீத்தல் கொலைக்கு சுனில் தான் காரணமா, ஷீத்தலையும், சுனிலையும் பின் தொடர்ந்து யாராவது கொலை செய்தனரா என்பது அடுத்தடுத்த விசாரணையில் தெரிய வரலாம்.