க்ரைம்
Trending

அணை மீன் விற்பனை மையத்தில் முறைகேடு – பொதுமக்களைப் புறக்கணித்து வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதாகக் குற்றச்சாட்டு!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பாலாறு பொருந்தல் அணையில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் சார்பாக மீன் விற்பனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு குறைந்த விலையில் மீன் கிடைக்கும் என்பதால் பழனி மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இங்கு மீன் வாங்கிச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த மீன் விற்பனை மையத்தில் பொதுமக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாமல் வியாபாரிகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் இந்த மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொதுமக்களுக்கு மீன்களை வழங்காமல் உள்ளூர் வியாபாரிகளுக்கு மீன்களை வழங்கிவிடுவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கவேண்டிய மீன்கள் பழனி நகரப் பகுதியில் உள்ள தனியார் மீன் கடைகளில் தாராளமாகக் கிடைக்கின்றன. அணை விற்பனை மையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மீன்கள் அனைத்தையும் மொத்தமாக உள்ளூர் வியாபாரிகளுக்கே வழங்கி விடுவதால் பொதுமக்கள் வேறு வழியின்றி நகரப் பகுதி கடைகளில் அதிக விலை கொடுத்து மீன் வாங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே, பொதுமக்களின் பயன்பாட்டிற்காகச் செயல்படும் அரசு மீன் விற்பனை மையத்தில் நடைபெறக்கூடிய இந்த முறைகேடுகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நேரில் சென்று ஆய்வு நடத்த வேண்டும் என்றும், பொதுமக்களுக்குச் சீரான முறையில் மீன் கிடைப்பதை உறுதி செய்து, தவறு இழைக்கும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பழனி பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button