
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வனச்சரகத்திற்குட்பட்ட வெங்கனூர் கிராமத்தில் வயல்வெளியில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்த காட்டுப்பன்றியின் உடலை அரசலூர் கிராமத்திற்கு கொண்டு வந்து, அதை கூறுபோட்டு சமைக்க முயன்றதாக 7 பேரை வேப்பந்தட்டை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் சக்திவேல் உத்தரவின்பேரில், வேப்பந்தட்டை வனத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், வேப்பந்தட்டை வனச்சரக அலுவலர் பழனிகுமரன் தலைமையில் வனவர் அஜித்குமார், வனக்காப்பாளர் அன்பரசு மற்றும் வனக்காவலர் சிவரஞ்சனி ஆகியோர் அடங்கிய குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, வெங்கனூர் கிராமத்தில் வயல்வெளியில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி காட்டுப்பன்றி உயிரிழந்தது தெரியவந்தது. அதன் உடலை அரசலூர் கிராமத்திற்கு கொண்டு சென்று, கூறுபோட்டு சமைக்க முயன்றதாகக் கூறப்படும் 7 பேரை வனத்துறையினர் பிடித்து கைது செய்தனர்.
தொடர்ந்து, அவர்களிடம் விசாரணை நடத்தி, வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.