தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிகளை மீறி செயல்பட்டு வந்த 19சாயப்பட்டறை ஆலைகளுக்கு, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் இன்று அதிரடியாக சீல் வைத்தனர். அமைச்சரின் ஆய்வைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் சங்கரன்கோவில் பகுதியில் உள்ள சாயப்பட்டறை ஆலைகளில் அமைச்சர் ராஜீவ் அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஆலைகள் உரிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இல்லாமல், சுற்றுச்சூழலுக்கும் நிலத்தடி நீருக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, விதிமுறைகளை மீறி செயல்படும் சாயப்பட்டறை ஆலைகளை உடனடியாக மூடி சீல் வைக்க அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அமைச்சரின் உத்தரவைத் தொடர்ந்து, முதற்கட்ட நடவடிக்கையாக கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு, விதிகளை மீறிய 20சாயப்பட்டறை ஆலைகளுக்கான மின் இணைப்பு அதிரடியாக துண்டிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக இன்று, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் அடங்கிய 4 சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டன. இந்த அதிகாரிகள் குழுவினர் சங்கரன்கோவில் பகுதியில் உள்ள சம்பந்தப்பட்ட 19சாயப்பட்டறைகளுக்கும் நேரில் சென்று, அவற்றைப் பூட்டி சீல் வைத்தனர்.
இந்த திடீர் சீல் வைப்பு நடவடிக்கையால் தங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சாயப்பட்டறை உரிமையாளர்கள் மற்றும் சாயப்பட்டறை தொழிலாளர்கள் மிகுந்த மனவேதனையுடன் தெரிவித்துள்ளனர்.


