
கிருஷ்ணகிரி மாவட்டம் கெங்கிநாயக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சிவன் மனைவி சுதா இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இவர்கள் அனைவரும் நேற்று வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் ஓசூருக்குச் சென்றுள்ளனர். அப்போது வீடு பூட்டப்பட்டிருப்பதை நோட்டமிட்ட திருடர்கள் தங்கள் முக அடையாளம் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக, வீட்டின் முன்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த 3 சிசிடிவி கேமராக்களையும் அடித்து உடைத்துச் சேதப்படுத்தியுள்ளனர். இன்று காலை சிவனின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஜனநாயகன் பார்த்தபோது, கேமராக்களும் வீட்டின் பூட்டும் உடைக்கப்பட்டிருப்பத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக ஓசூரில் இருந்த சிவனுக்குத் தகவல் தெரிவித்தார். இதை தொடர்ந்து, விரைந்து வந்து பார்த்த சிவன், வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 20 சவரன் நகைகளும், ரூ.3 லட்சம் பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை அறிந்து போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நேரில் ஆய்வு நடத்தினர். பின்பு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அப்பகுதியில் உள்ள பிற சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து, கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

