
ஆந்திர மாநிலம் சாலூரில் ஜில்லா பரிஷத் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் சாலூர் பெதஹரிஜனபேட்டை பகுதியைச் சேர்ந்த துபாகுலா, அருண் தேஜா, ஆகிய இருவரும் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார்கள். இந்நிலையில், மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு தனது நண்பரான யாகூப்புடன் பள்ளி காம்பவுண்ட் சுவர் மீது அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக சுவர் இடிந்து இருவர் மீதும் விழுந்தது. இடிபாடுகளில் சிக்கிய அருண் தேஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த யாகூப் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த தகவல் அறிந்த பெற்றோர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, மாணவரின் உயிரிழப்பு குறித்து பள்ளி நிர்வாகம் தங்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கவில்லை என பெற்றோர் குற்றம்சாட்டினர். உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.



