
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே வேலம்மாள் தனியார் பள்ளி செயல்பட்டு வருகின்றது. அங்கு விடுமுறைக்காக சொந்த நாடுகளுக்குச் சென்றிருந்த மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு திரும்புவதற்காக சென்னை விமான நிலையம் வந்துள்ளனர். அங்கிருந்து தனியார் பள்ளிக்குச் சொந்தமான பேருந்தில் மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர். அப்போது, சோழவரம் அருகே ஜனப்பன்சத்திரம் கூட்டுச்சாலை பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிரே சென்ற கண்டெய்னர் லாரியுடன் பள்ளி பேருந்து மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த மாணவர்கள் மற்றும் பேருந்து ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவலறிந்த பள்ளி நிர்வாகம் உடனடியாக மாற்றுப் பேருந்தை வரவழைத்தது காயமடைந்த மாணவர்களை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார், இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


