
மதுரையில் காவல்துறை தாக்குதலில் பூசாரி உயிரிழந்ததாக குற்றம் சாட்டப்படும் விவகாரத்தில் 8 மணி நேரம் நீதிபதி போலீசாரிடம் விசாரணை நடத்தினார்.
மதுரை மாவட்டம் மேல அனுப்பானடியை சேர்ந்தவர் பூசாரி பரமசிவம். இவருக்கும் பக்கத்து வீட்டினருக்கும் இடையே வாகனம் நிறுத்துவது தொடர்பாக கடந்த மாதம் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு குறித்து பக்கத்து வீட்டினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் பரமசிவன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு விசாரணையின் போது பரமசிவத்தை போலீசார் தாக்கியதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். இதனைத் தொடர்ந்து விடுவிக்கப்பட்ட பரமசிவம், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் பரமசிவம் வீட்டில் தானாக கீழே விழுந்ததில் காயமடைந்ததாக போலீசார் தரப்பில் மறுப்பு அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த வழக்கு குறித்து நீதிமன்றத்தில் 8 மணி நேரம் நீதிபதி போலீசாரிடம் விசாரணை நடத்தினார்.

