
புதுச்சேரி கோவிந்தசாலை பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று இரவு அண்ணா சாலையில் உள்ள மதுக்கடையில் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது, ஆனந்தனுக்கும் அங்கு இருந்த மற்றொரு கும்பலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கிருந்து புறப்பட்டு சென்ற ஆனந்தனை, அந்த கும்பல் பின்தொடர்ந்து சென்று, தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த ஆனந்தன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த விசாரணையில், கொலை செய்யப்பட்ட ஆனந்தன் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் முன் விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து, கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.