
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில், ஜமுனாமரத்தூர், மேல்பட்டு, நாடானூர் உள்ளிட்ட வனச்சரகங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், அவர்களின் குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு பட்டா பெற்றுத் தருவதாகக் கூறி வனத்துறையினர் பணம் வசூலித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், சுமார் ரூ.1.2 கோடி லஞ்சம் பெறப்பட்டதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையை தொடர்ந்து, வனச்சரகர்கள் பிரபு, சுரேஷ், செங்குட்டுவன், வனவர்கள் சுப்பிரமணி, அருணகிரி மற்றும் வனக்காவலர் முத்து ஆகிய 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இது குறித்து விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், வனத்துறை அதிகாரிகள் மீதான நடவடிக்கையின் பின்னணியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவர் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ஜவ்வாது மலை விவகாரம் தற்போது அரசியல் ரீதியாகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

