உயிருக்கு உலை வைக்கும் கொடுங்கையூர் குப்பைமேடு வளாகத்தை அகற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னை கொடுங்கையூர் பகுதியில் செயல்பட்டு வரும் குப்பைமேடு வளாகத்தை உடனடியாக அகற்ற வலியுறுத்தி சி.பி.எம் மாணவர் படை தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை கலந்து கொண்டு “குப்பைமேடு வேண்டாம் சுத்தமான வாழ்வாதாரம் வேண்டும்” என முழக்கங்கள் எழுப்பிய நிலையில், குப்பைமேடு காரணமாக துர்நாற்றம் ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக குற்றம் சாட்டினார். இது குறித்து, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதிலும் நடவடிக்கை இல்லை என தெரிவித்த அப்பகுதி மக்கள், பொதுமக்களின் உயிர் மற்றும் உடல்நலனை விட குப்பை மேலாண்மைக்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாக கண்டனம் தெரிவித்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் குப்பைமேடு வளாகத்தை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்றும், மருத்துவ பரிசோதனை முகாம் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், இல்லை என்றால் உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


