
தூத்துக்குடி தெப்பக்குளம் பகுதியில் சட்டவிரோத கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதனை தொடர்ந்து, மத்தியபாகம் காவல் நிலைய போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட போது தூத்துக்குடி தெப்பக்குளம் அருகே சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை பிடித்து விசாரணை செய்தனர். இந்த விசாரணையின் போது அவர்கள் தூத்துக்குடி நேதாஜி நகரை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களிடம் சட்டவிரோதமாக விற்பனை செய்ய 1 கிலோ 200 கிராம் கஞ்சா வைத்திருப்பதைக் கண்ட மத்தியபாகம் போலீசார் இரண்டு பேரையும் கைது செய்தனர். பின்னர், அவர்களிடம் இருந்த 1 கிலோ 200 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.


