
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூரில் ஸ்ரீ ஒப்பனையம்மாள் சமேத பால்வண்ணநாதர் சுவாமி கோயிலில் ஆவணி தபசு திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஒப்பனையம்மாள் திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவின் 11ஆம் திருநாளான இன்று, சிறப்பு அலங்காரத்தில் ஒப்பனையம்மாள் திருத்தேரில் எழுந்தருளினார். இதையடுத்து 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தேரின் வடம் பிடித்து, நான்கு ரத வீதிகளிலும் தேரை இழுத்துச் சென்றனர். வழிநெடுகிலும் திரண்டிருந்த பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர். இதனையடுத்து ஆவணி தபசு விழாவின் சிகர நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி நடைபெற உள்ளதால், அன்று ஒப்பனையம்மாள் முகலிங்கநாதராகவும், பால்வண்ணநாதராகவும் காட்சி அளிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்த விழாவை முன்னிட்டு 100-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
