
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் போலீசார் நேற்று இரவு தமிழக–கர்நாடக எல்லையான ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் பழனி நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்தை நிறுத்தி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையில், பேருந்தில் பயணம் செய்த திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரகு என்பவர் வைத்திருந்த உடமைகளில் எம்.டி.எம்.ஏ எனப்படும் தடை செய்யப்பட்ட மெத்தபெட்டமைன் 6 கிலோ எடையுள்ள இந்த போதைப்பொருள் 6 பண்டல்களாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, சுமார் ரூ. 6 கோடி மதிப்பிலான போதைப்பொருளைப் பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட ரகுவை கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், மும்பையில் இருந்து இலங்கைக்கு கடத்திச் செல்வதாகவும் அவர் பெங்களூருவிலிருந்து உடுமலைப்பேட்டைக்கு ஆம்னி பேருந்தில் கொண்டு சென்றது தெரிய வந்தது. இந்த கடத்தல் கும்பலின் முக்கிய நபர்கள் குறித்து சிப்காட் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் அவரிடம் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணைக்கு பின் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
