
தூத்துக்குடி மாவட்டம் நேசமணி நகரைச் சேர்ந்தவர் மரிய வின்சென்ட், காங்கிரஸ் கட்சித் தலைவர் சகாயராஜனின் தந்தை ஆவார். இவர் முத்தையாபுரம் பகுதியில் மதுபானக் கடைகள் மூடப்பட்ட பிறகும் கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெறுவதாகக் கூறி, திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரால் கோபமடைந்த நேசமணி நகர் பகுதியைச் சேர்ந்த கற்பகராஜ், இன்று மாலை மரிய வின்சென்ட்டின் வீட்டிற்குச் சென்று, கள்ளச்சந்தை மது விற்பனை தொடர்பாக எவ்வாறு புகார் அளிக்கலாம் எனக் கேட்டு அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் மரிய வின்சென்ட்டை அவர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் கண்ணில் பலத்த காயமடைந்த மரிய வின்சென்ட், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், இச்சம்பவம் தொடர்பாக முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

