
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் மதுபானக் கடையின் அருகில் பழைய இரும்புப் பொருட்கள் மற்றும் மதுபாட்டில்களை சேகரித்து வந்த நபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். இந்த தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த சந்திரசேகர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, இந்த கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளி குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், போடம்பட்டியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும், இந்த கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.