
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சுப்பையா–கல்யாணி. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். இந்த தம்பதியினர் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில், திங்கள்கிழமை நள்ளிரவு காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கியுள்ளனர். அப்போது சுமார் 12 மணியளவில் சுவர் ஏறி குதித்து வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர், கல்யாணி அருகே சிறிது நேரம் அமர்ந்து நகைகள் எங்கு வைக்கப்பட்டுள்ளன என்பதை நோட்டமிட்டுள்ளார். பின்னர் சத்தமின்றி பீரோவை திறந்து அதிலிருந்த 3½ பவுன் தங்க நகைகளை திருடியுள்ளார். இதை தொடர்ந்து வேறு பொருட்களை திருடுவதற்காக கல்யாணி அருகிலேயே அமர்ந்திருந்த நிலையில், அவரை பேரன் என நினைத்த கல்யாணி, இங்கு ஏன் அமர்ந்திருக்கிறாய் போய் படு என கூறியுள்ளார். இதையடுத்து எதுவும் நடக்காதது போல் மெதுவாக எழுந்த அந்த நபர், மீண்டும் சுவர் ஏறி குதித்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதை தொடர்ந்து, மறுநாள் பீரோ திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த தம்பதியினர், புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, நகைகளை திருடிச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.