
தூத்துக்குடியில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம் மற்றும் சென்னை சில்க்ஸ் நிறுவனம் சார்பில் புத்தக கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. 25 அரங்குகளுடன் நடைபெறும் இந்த புத்தக கண்காட்சியில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. அதில், அரசியல், இலக்கியம், கதைகள், கவிதைகள், போட்டித் தேர்வுகளுக்கான நூல்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த புத்தக கண்காட்சியை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா ஆகியோர் தொடங்கி வைத்து, அரங்குகளை பார்வையிட்டனர். இதனை தொடர்ந்து, 11 நாட்கள் நடைபெற உள்ள இந்த கண்காட்சியில் பள்ளி மாணவ, மாணவிகளின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட உள்ளன. இப்போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடியில் உள்ள என்எல்சி தமிழ்நாடு பவர் லிமிடெட் நிறுவனம் மற்றும் தூத்துக்குடி தூய மரியன்னை மகளிர் கல்லூரி இணைந்து நடத்திய கண் சிகிச்சை முகாமை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார். இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


