மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே வடகரை கண்மாயில் விவசாய பயன்பாட்டுக்காக அனுமதி பெற்று எடுக்கப்பட்டதாக கூறப்படும் வண்டல் மண்ணை டிப்பர் லாரியுடன் வாடிப்பட்டி வட்டாட்சியர் சுந்தரவேல் தலைமையிலான வருவாய்த் துறையினர் விரட்டிப் பிடித்தனர்.
ஆய்வின்போது நிறுத்துமாறு கூறியும் நிற்காமல் சென்ற லாரியை அதிகாரிகள் துரத்திச் சென்றனர். பெட்ரோல் பங்க் அருகே லாரியை நிறுத்தி டிப்பரில் இருந்த மண்ணை சாலையோரத்தில் கொட்டி தடயத்தை மறைக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாடிப்பட்டி, சோழவந்தான் பகுதிகளில் தொடர்ந்து கனிம வளங்கள் கடத்தப்படுவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், நடவடிக்கை மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


