
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் அரசு பெண்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. அந்த விடுதியில் புதுப்பாளையத்தை சேர்ந்த ராதிகா துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் ரகுபதி என்பவருக்கும் தொடர்புள்ள நிலையில் அடிக்கடி ராதிகாவை சந்திக்க விடுதிக்கு செல்வதை ரகுபதி வழக்கமாக கொண்டுள்ளார். இதற்கு அந்த விடுதியின் சமையலர் கலைச்செல்வி மற்றும் அங்கு பணியாற்றும் பிற ஊழியர்களும் ரகுபதிக்கு துணையாக இருந்துள்ளனர். இந்நிலையில் சமையலர் கலைச்செல்வி விடுதியில் இருந்து செல்போன் சார்ஜர் ஒன்றை பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவிகளிடம் கொடுத்து,அதனை ராதிகா வீட்டில் கொடுத்து வரும்படி விடுதியில் இருந்து வெளியே அனுப்பி உள்ளார். அப்போது ராதிகா வீட்டில் இருந்த ரகுபதி அந்த இரண்டு மாணவிகளையும் உள்ளே அழைத்து அவதூறாக பேசியுள்ளார். பின்னர் இரவு நேரங்களில் விடுதி காவலராக உள்ள சுமதி விடுமுறை எடுக்கும் போதெல்லாம் ராதிகா தான் விடுதியை பார்த்துக் கொள்வார். அப்பொழுது ஒரு நாள் இரவு 9 மணி அளவில் வெளியே சென்று ரகுபதி பாட்டில் தருவார் அதை வாங்கி வரும்படி மாணவிகளை ராதிகா விடுதியை விட்டு வெளியே அனுப்பி உள்ளார். அங்கு வெளியே காத்துக் கொண்டிருந்த ரகுபதி கையில் இரண்டு மது பாட்டில் மற்றும் சில அசைவ உணவுகளையும் மாணவிகளிடம் கொடுத்து அதனை ராதிகாவிடம் கொடுக்குமாறு கூறினார். அதன் பின்னர் இரண்டு மாணவிகளையும் ராதிகா விடுதியில் உள்ள குடிநீர் டேங்க் அருகே அழைத்துச் சென்று குளிர் பானத்தில் மதுவை கலந்து இரண்டு மாணவிகளுக்கும் கொடுத்துள்ளார். பின்னர் வாசலில் காத்துக் கொண்டிருந்த ரகுபதி போதையில் இருந்த இரண்டு மாணவிகளையும் காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். பின்னர் வலியில் கதறி துடித்த இரண்டு மாணவிகளையும் விடுதிக்கு தூக்கி கொண்டு வந்து அவர்களது அறையில் விட்டு விட்டு ரகுபதி அங்கிருந்து சென்றுள்ளார். இது குறித்து வெளியே சொன்னால் உங்களை ரகுபதி சும்மா விட மாட்டார் என ராதிகா மாணவிகளிடம் கூறி மிரட்டி உள்ளார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று மாணவிகளை சந்திக்க அவரது பெற்றோர்கள் விடுதிக்கு வந்துள்ளனர். அப்போது 2 மாணவிகளும் தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து தங்களது பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். இதையடுத்து மாணவிகளின் பெற்றோர்கள் வாழப்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படியில் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி தூய்மை பணியாளர் ராதிகா மற்றும் ரகுபதி ஆகிய இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
