
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு நியாயவிலைக் கடைகளில் கடந்த 10 நாட்களாக POS விற்பனை முனையங்களில் சர்வர் மற்றும் இணையதள இணைப்புக் கோளாறு தொடர்ந்து நீடித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் ரேஷன் பொருட்களை வாங்க வரும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்தும் பொருட்களைப் பெற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பொருட்கள் விநியோகத்தில் தாமதம் ஏற்படுவதால், பொதுமக்களுக்கும் நியாயவிலைக் கடை விற்பனையாளர்களுக்கும் இடையே தேவையற்ற வாக்குவாதங்களும் மன உளைச்சலும் ஏற்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பிரச்சனைக்கு உடனடி தீர்வு காணக் கோரி தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் தனிவட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் POS விற்பனை முனையங்களில் ஏற்பட்டுள்ள சர்வர் பிரச்சனை மற்றும் இணையதளக் குளறுபடிகளை விரைந்து சரிசெய்து, பொதுமக்களுக்கு அத்தியாவசிய ரேஷன் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பிரச்சனைக்கு உடனடியாகத் தீர்வு இல்லை என்றால் பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு அடுத்தகட்ட போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும் என சங்கத்தின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


