க்ரைம்

தூத்துக்குடி : மனைவி, குழந்தைகளை அனுப்பாத கோபத்தில் மாமனாரை அரிவாளால் வெட்டிய மருமகன்

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் வேலாயுதநகர் பகுதியைச் சேர்ந்தவர் முனியசாமி. ஆட்டோ ஓட்டி வரும் இவருக்கு ராமலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் மகனும் உள்ளனர். முனியசாமி தனது மகளுக்கு மதுரையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முருகன் என்பவருடன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். முருகன் அடிக்கடி மது போதையில் தனது மனைவியை அடித்து துன்புறுத்தி வந்ததால் மனைவி தனது தந்தையிடம் தன்னையும் குழந்தைகளையும் முத்தையாபுரத்தில் உள்ள வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டுள்ளார். இதையடுத்து, முனியசாமி தனது மகள் மற்றும் பேரக்குழந்தைகளை தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகன், தனது மனைவியிடம் அடிக்கடி செல்போனில் தொடர்புகொண்டு மதுரைக்கு வருமாறு தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், முனியசாமி தனது மகளை மீண்டும் மதுரைக்கு அனுப்பி வைக்கவில்லை. இந்நிலையில், நேற்று இரவு வீட்டில் முனியசாமியும் அவரது மகளும் இருந்துள்ளனர். அப்போது, நள்ளிரவு சுமார் 1 மணியளவில் மதுரையில் இருந்து தனது நண்பர்கள் சிலருடன் இருசக்கர வாகனத்தில் வந்த முருகன், வீட்டிற்கு வெளியே படுத்து தூங்கிக் கொண்டிருந்த முனியசாமியை பீர் பாட்டிலால் தாக்கியதுடன், அரிவாளாலும் சரமாரியாக வெட்டியுள்ளார். இதையடுத்து, படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய முனியசாமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். தற்போது திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் முனியசாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாமனாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியதாக கூறப்படும் முருகன் மற்றும் அவரது நண்பர்களையும் தேடி வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button