
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தொடர்ந்து பல்வேறு உட்கட்சி சவால்களை எதிர்கொண்டு வரும் அதிமுகவில், தற்போதைய அரசியல் சூழல் மேலும் தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவுக்குப் பிறகு, கட்சியை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரவும், தலைமையை வலுப்படுத்தவும் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஆனால், கட்சியின் பாரம்பரிய ஆதரவு பகுதிகளாக கருதப்படும் கொங்கு மண்டலம் மற்றும் வட மாவட்டங்களிலேயே அதிருப்தி குரல்கள் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோரின் ஆதரவாளர்கள் மத்தியில் நிலவும் அதிருப்தி, கட்சியின் உள்கட்டமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்த சூழலை பயன்படுத்திக் கொண்டு தவெக, அதிமுகவில் உள்ள முக்கிய நிர்வாகிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை தங்கள் பக்கம் ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்தது கட்சி தலைமையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த விலகல்களைத் தடுக்கவும், கட்சியின் ஒற்றுமையை நிலைநிறுத்தவும் வெளியேறியவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், தவெகவின் வளர்ச்சியை எதிர்கொள்ள பாஜக மேலிடத்தின் ஆதரவைப் பெறும் முயற்சிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர், கட்சியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்வதற்காக ஆகஸ்ட் மாதத்தில் உயர்நிலை செயற்குழுக் கூட்டத்தை நடத்த எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கட்சிக்குள் அதிகரித்து வரும் எதிர்ப்புகளை சமாளிக்க மத்திய பாஜகவின் அரசியல் ஆதரவு தேவை என அதிமுக தலைமை கருதுவதாக தெரிகிறது. இதன் ஒரு பகுதியாக, டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்த எடப்பாடி பழனிசாமி முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
முன்னதாக ஜூலை 22ஆம் தேதி நடைபெற இருந்த இந்த சந்திப்பு, அமித் ஷாவின் தமிழக பயணம், டெல்லியில் நடைபெற்ற நீட் தொடர்பான போராட்டங்கள் மற்றும் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் காரணமாக ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நிறைவடைந்த பின்னர், ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் இந்த சந்திப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜக மேலிடத்தின் ஆதரவைப் பெறுவதன் மூலம் கட்சிக்குள் நிலவும் அதிருப்தியை கட்டுப்படுத்தவும், மேலும் பல முக்கிய நிர்வாகிகள் மாற்றுக் கட்சிகளுக்கு செல்லாமல் தடுக்கவும் முடியும் என எடப்பாடி பழனிசாமி நம்புவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.