இந்தோனேஷியாவில் பயணிகள் கப்பல் நடுக்கடலில் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 41 பேர் மாயமாகினர்.
கிழக்கு ஜாவாவில் உள்ள நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான சுரபயாவிலிருந்து மக்காசார் என்ற நகருக்கு 271 பயணிகளுடன் அந்த கப்பல் சென்று கொண்டிருந்தது. மதுரா என்ற தீவுக்கு அருகே நடுக்கடலில் சென்றுகொண்டிருந்த போது திடீரென பற்றிய தீ கப்பல் முழுதும் மளமளவெனப் பரவியது. படகில் இருந்து பெருமளவில் தீப்பிழம்புகள் எழுந்த நிலையில், கடல் பகுதியே புகைமண்டலமாகக் காட்சி அளித்தது. நெருப்பில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து உயிர் தப்புவதற்காக பலர் கடலில் குதித்தனர். அவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே அலறியடித்து அங்குமிங்கும் ஓடிய பயணிகள் பலர் மாற்றுக் கப்பல்கள் மூலம் கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கடலில் குதித்தவர்கள் உட்பட 41 பயணிகள் நிலை என்ன என தெரியவில்லை. அவர்களை மீட்க அனைத்து பாதுகாப்பு முகமைகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதாக இந்தோனேசிய போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
