



திண்டுக்கல்லில் உள்ள இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின்கீழ் இயங்கும் காந்திகிராமியப் பல்கலைக்கழகத்தில் இந்தித்துறையின் சார்பில் ‘இந்தி நாள்’ விழா 17.09.2026 வியாழக்கிழமை அன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
மொழி நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் உயர்கல்வியில் இந்தி மொழியை வளப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக்கொண்டு இவ்விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவில் இந்தித்துறையின் மூத்த பேராசிரியர் முனைவர் சலீம்பெய்க் வரவேற்புரை ஆற்றினார். தமிழ் மற்றும் இந்திய மொழிகள் புலத்தின் தலைவர், பேராசிரியர் பா.ஆனந்தகுமார் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
இந்தித்துறையின் தலைவர் பேராசிரியர் கந்தாரே சந்து அனைவருக்கும் நன்றி கூறினார். போட்டிகளில் வெற்றிபெற்ற பல்வேறு துறைசார்ந்த மாணவர்களுக்கு நினைவுப் பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டன.
பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ந.பஞ்சநதம் அவர்கள் விழாவிற்குத் தலைமை வகித்துப் பேசியதாவது: “மக்களிடையே பண்பாட்டுப் பிளவுகளைக் குறைப்பதிலும் கல்வித் துறைகளிடையே ஒற்றுமையை வளர்ப்பதிலும் வட்டார மற்றும் தேசிய மொழிகள் பெரும்பங்காற்றுகின்றன. அம்மொழிகளை வளர்ப்பதிலும் பரப்புவதிலும் கல்வியாளர்கள் பங்கேற்பதைப்போலவே இளைய தலைமுறையினரும் பங்காற்ற வேண்டும்” என்றார்.
திண்டுக்கல் கனரா வங்கியின் உதவிப் பொது மேலாளரும் டோலிக் (TOLIC) அமைப்பின் தலைவருமான திரு.விஞ்சமூரி ராகுல் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் அலுவல் பரிமாற்றங்களில் இந்திமொழியின் பயன்பாடும் தேவைகளும் குறித்து எடுத்துரைத்தார்.
விழாவில் இந்தி, தமிழ், மலையாளம் ஆகிய துறைகளிலிருந்து திரளான பேராசிரியர்களும் மாணவர்களும் பங்கேற்றனர்.