
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த ஆனந்தன் 2021-ம் ஆண்டு வெளிநாடு சென்றுள்ளார். அப்போது தனது பெயரை ஆன்டனி அருண் என மாற்றி, கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் எனக் குறிப்பிட்டு போலி ஆவணங்கள் தயாரித்து, அதன் அடிப்படையில் போலி பாஸ்போர்ட் பெற்று வெளிநாடு சென்றார்.
கும்பகோணத்தைச் சேர்ந்த கணேஷமூர்த்தியிடம் ஆனந்தன் பணம் கொடுக்க வேண்டியிருந்ததாக தெரிகிறது. ஆனந்தன் வெளிநாடு சென்றதை அறிந்த கணேஷமூர்த்தி, அவரை தொடர்பு கொள்வது குறித்து விசாரித்தபோது, போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது. இதையடுத்து, கணேஷமூர்த்தி கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு பின் சென்னை விமான நிலையத்திற்கு வந்த ஆனந்தனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

