
திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாது காப்புக்காட்டில் இந்திய சருகுமானை (Indian Chevrotain) சட்டவிரோதமாக வேட்டையாடியதாக இருவர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து இரண்டு நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருப்பத்தூர் வனக்கோட்டம், சிங்காரப்பேட்டை வனச்சரகத்திற்குட்பட்ட சிங்காரப்பேட்டை பிரிவு, ஆனந்தவாடி பீட்டின் இன்னர் ஜவ்வாது காப்புக்காடு பகுதியில் இன்று (02.08.2026) அதிகாலை வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, காப்புக்காடு பகுதிக்குள் அத்துமீறி நுழைந்திருந்த இருவர், இரண்டு நாட்டு துப்பாக்கிகளுடன் வன உயிரினமான இந்திய சருகுமானை வேட்டையாடியிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, சங்கர் (37), சாமிநாதன் மகன் மற்றும் சங்கர் (55), கோவிந்தசாமி மகன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
மேலும், வேட்டையாடப்பட்ட நிலையில் இருந்த இந்திய சருகுமான், இரண்டு நாட்டு துப்பாக்கிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு சிங்காரப்பேட்டை வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
இச்சம்பவம் தொடர்பாக, வன உயிரினப் பாதுகாப்புச் சட்டம், 1972-ன் கீழ் WLOR எண்: 03/2026, நாள் 02.08.2026 என வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மேலதிக விசாரணை மற்றும் சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

