
மேகதாது அணை விவகாரத்தில் அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டி உரிய நடவடிக்கை எடுக்காதது, காவிரி நீரை பெற்றுத் தராதது மற்றும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாதது குறித்து தூத்துக்குடியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான சிங்காரம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது, தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. கூட்டத்தில் பேசிய சிங்காரம், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சி.வி. சண்முகம், நத்தம் விஸ்வநாதன், கே.பி. அன்பழகன் ஆகிய நான்கு பேரும் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக குற்றம்சாட்டினார். எனவே, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி துணிச்சலான நடவடிக்கை எடுத்து உடனடியாக நான்கு பேரையும் கட்சியை விட்டு நீக்கினால் கட்சியில் உள்ள குழப்பங்கள் தீரும் என்று கூறி அவர்களை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

