
சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர், நேபாளத்திற்கு ஆன்மீக சுற்றுப்பயணம் சென்றிருந்த நிலையில், அங்கு ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி மாயமாகியுள்ளனர். அவர்களை விரைந்து மீட்கக் கோரி உறவினர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, அமைச்சர் வெங்கடரமணன், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி மற்றும் அதிகாரிகள், காணாமல் போனவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து பேசினர். அப்போது, அவர்களை மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து குடும்பத்தினரிடம் விளக்கினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வெங்கடரமணன், நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலை குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அவர்களை மீட்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
