செய்திகள்

திண்டுக்கல் அருகே கோர விபத்து – 4 குழந்தைகள் பலி

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகேயுள்ள கொல்லப்பட்டி சமத்துவபுரம், கணவாய் மேடு பகுதிக்கு அருகே இன்று பிற்பகல் பழனிச்சாமியின் மனைவி அஞ்சம்மாள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அவருடன் சென்றிருந்த உறவினர்களின் குழந்தைகள் சாலையோரமாக அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த பால் ஏற்றிச் சென்ற வேன், திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் அமர்ந்திருந்த குழந்தைகள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் நாகராஜின் மகள்களான யோகவர்ஷினி, அனன்யா, தனுஸ்ரீ, மோசிகரன் ஆகிய 4 குழந்தைகளும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அந்த குழந்தைகளுடன் இருந்த மூதாட்டி அஞ்சம்மாள், விபத்தின் அதிர்ச்சியில் மயக்கமடைந்தார். இந்த விபத்தை ஏற்படுத்திய பால் வேன் நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. மேலும், இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த 4 குழந்தைகளின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய பால் வேனை போலீசார் பறிமுதல் செய்ததுடன், தப்பிச் செல்ல முயன்ற ஓட்டுநரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பிஞ்சு குழந்தைகள் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button