
மதுரை மாவட்டம் மேலூரில் எஃப்.கியூ.எல் என்ற ஆன்லைன் செயலி மூலம் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என கூறப்பட்டதை நம்பி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் லட்சக்கணக்கான ரூபாயை முதலீடு செய்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு செயலி முடங்கியதால், பணம் முதலீடு செய்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து புகார் பெறுவதற்காக மேலூரில் உள்ள 3 இடங்களில் போலீசார் சிறப்பு முகாம்கள் கடந்த 3 நாட்களாக நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இன்று காலை முதலே மேலூர் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பணத்தை மீட்டுத் தரக்கோரி புகார் மனுக்களை அளித்தனர். இதனை தொடர்ந்து, இன்று ஒருநாள் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் புகார் அளித்துள்ள நிலையில், கடந்த 3 நாட்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புகார் மனுக்களை அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.