
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான தம்பதி கைது செய்யப்பட்டு, விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். கடந்த சில நாள்களுக்கு முன் ,தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் ஆக்ரா ரயில் நிலையத்தில் நின்றபோது, சூட்கேஸில் தலையில்லாத பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கூடுவாஞ்சேரியில் உள்ள வீட்டில் கொலை நடந்தது தெரியவந்தது. இது ஹயாத் நிஷா என்ற பெண்ணை கொலை செய்து, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் எடுத்துச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான மாணிக் உத்தின் மணிப்பூரிலும், அவரது மனைவி பகபதி மாஜி அசாமிலும் கைது செய்யப்பட்டனர். இருவரும் அந்தந்த நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், தாம்பரம் போலீசார் பலத்த பாதுகாப்புடன் விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர். பின்னர் இருவரும் விசாரணைக்காக போலீஸ் வாகனத்தில் பெருங்களத்தூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.