
ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபின் உத்தரவின்பேரில், அரக்கோணம் பகுதியில் போலீசார் இரவு, பகல் என தொடர்ந்து ரோந்து மற்றும் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பாணாவரம் போலீசார் பிள்ளையார் குப்பம் கூட்டுச்சாலை பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த காரை மடக்கி போலீசார் சோதனை செய்தனர். அந்த சோதனையில் காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 பட்டாக்கத்திகள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து காரில் வந்த நான்கு பேரையும் போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் சஞ்சய்குமார், ரஞ்சித், மணி, குமரன் ஆகிய 4பேர் என்பது தெரியவந்தது. இதையடுத்து நான்கு பேரையும் பாணாவரம் போலீசார் கைது செய்து, சோளிங்கர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
