
கடலூர் மாவட்டம் கீழ்நத்தம் கிராமத்தில், ஆகஸ்ட் 17-ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் பிறந்தநாளை முன்னிட்டு பேனர் வைக்கப்பட்டதால் இரு பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. aந்த தகராறில் பேனர் கிழிக்கப்பட்டதுடன், பட்டியலின இளைஞர்களை சாதிப்பெயரை கூறி அவதூறாக பேசியதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் கத்தி, இரும்பு கம்பி மற்றும் கற்களை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், மோதலை தடுக்க வந்த பெண்களும் தாக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த சம்பவத்தில் பெண்கள் உட்பட 5 பேர் காயமடைந்த நிலையில், கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, பாதிக்கப்பட்ட பட்டியலின மக்கள் மீது போலீசார் பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.