
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலை கிராமமான கிழக்கு செட்டியபட்டியில் இயங்கிவரும் கில்கள் முதியோர் இல்லம் நுழைவாயிலில் உள்ள தாழ்வழுத்த மற்றும் உயரழுத்த மின்கம்பத்தில் கைலி அணிந்த நபர் ஒருவர் ஏறி மின் இணைப்புகளை எந்த வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி வெறும் கையால் வேலை செய்து கொண்டிருந்தார்.
மின் வாரிய ஊழியர்கள் அனைவருமே உரிய சீருடை அணிந்து அடையாள அட்டையுடன் அனைத்து வித பாதுகாப்பு உபகாரணங்களுடன் தான் பணியின்போது இருக்க வேண்டும் என சட்ட விதிகள் உள்ள நிலையில் இந்த கைலி அணிந்து மின்கம்பத்தில் ஏறி வேலை செய்துகொண்டிருந்த மர்ம நபர் யார் என்பது தெரியவில்லை. மேலும் அருகிலேயே அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. பள்ளி முடிந்து மாணவர்கள் இந்த மின்கம்பத்தில் கீழ் தான் பேருந்துக்காக காத்திருந்தனர்.
மேலும் ஆங்கங்கே மின் கம்பங்களில் நீளமான குச்சிகளில் கொக்கியுடன் வயர் இணைக்கப்பட்ட நிலையில் நீளமான குச்சிகள் தொங்கவிடப்பட்டுள்ளன. அருகிலேயே சோலார் மின்வேலிகளும் அமைக்கப்பட்டிருப்பதால் இரவு நேரத்தில் சோலார் மின்வேலிகளில் நேரடி மின்சாரத்தை பாய்ச்சுவதற்காகவோ அல்லது திருட்டு மின்சாரம் எடுக்கும் நோக்கத்திலோ இதுபோன்று தாழ்வழுத்த மின்கம்பங்களில் செல்லும் மின்கம்பிகளில் தொங்கவிடப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழும் நிலை உள்ளது.
