
இந்தியாவின் 31 மாநில முதலமைச்சர்களில் பணக்கார முதலமைச்சர் யார் என்பது குறித்து தனியார் நிறுவனம் ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவிலேயே கர்நாடகா முதலமைச்சர் டி.கே. சிவகுமார் ரூ.1,413 கோடி சொத்து மதிப்புடன் பணக்கார முதலமைச்சர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளார். ரூ.931.83 கோடி சொத்து மதிப்புடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் ரூ.648.85 கோடி சொத்து மதிப்புடன் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மூன்றாம் இடத்தை பிடித்திருக்கிறார். மாநில முதலமைச்சர்களிலே மிக குறைந்த சொத்து மதிப்பு ரூ.55.24 லட்சம் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா கடைசி இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் முதலமைச்சர்கள் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்கு விவரங்கள் குறித்தும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தெலுங்கானா முதலமைச்சர் ஏ.ரேவந்த் ரெட்டி மீது அதிகபட்சமாக 89 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி மீது 29 வழக்குகளும், டி.கே. சிவகுமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோர் மீது தலா 19 வழக்குகளும் நிலுவையில் இருப்பதாக தனியார் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் முதலமைச்சர்கள் வயது குறித்தும் கணக்கெடுக்கப்பட்டுள்ளது, அதன்படி, இந்தியாவிலேயே இளம் வயது முதலமைச்சர்கள் பட்டியலில் அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் பெமா கண்டு, மேகாலய முதலமைச்சர் கான்ராட் சங்மா ஆகியோர் முதலிடம் பிடித்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நான்காம் இடம் பிடித்துள்ளார். இந்த அறிக்கையில் இந்தியாவிலேயே மூத்த முதலமைச்சர் குறித்த ஆய்வில், புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி முதலிடம் பிடித்துள்ளார்.


