
தூத்துக்குடி மாவட்டம், துறையூர் செல்லும் சாலையில் உள்ள ஒரு தோட்டத்தில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட தோட்டத்தில் போலீசார் சோதனை நடத்தினர். அந்த சோதனையின் போது கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, சுமார் 418 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மற்றும் அவற்றை கடத்த பயன்படுத்தப்பட்ட ஒரு காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த கண்ணன், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கமலேஷ் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ரவீந்திர சிங் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் வடமாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்டதா, இதில் இன்னும் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
