
ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியில் அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு கட்சி சார்ந்த ஆலோசனைகள் வழங்குவது போன்று செயல்பாடுகளில் ஈடுபட்டு, அவற்றை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும் தவெக மேற்கு ஒன்றிய செயலாளர் சையது அஜ்மல் மீது புகார் எழுந்துள்ளது. மேலும், அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் அரசு ஊழியர்கள் தங்களது வழக்கமான பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், தவெக மேற்கு ஒன்றிய செயலாளர் சையது அஜ்மல், இது போன்ற செயல்களில் ஈடுபடுவது, பணிச்சூழலுக்கு இடையூறாக இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். மேலும், அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி வளாகங்களில் இதுபோன்ற செயல்பாடுகள் நடைபெறுவது தொடர்பாக கட்சி தலைமையின் கவனத்திற்கும் புகார்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தவெக தலைமை உரிய விசாரணை மேற்கொண்டு கட்சி கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டது உறுதியானால் சம்பந்தப்பட்ட நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


