
சென்னை திருவொற்றியூரில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழ்நாட்டில் பருவமழை காலம் தொடங்க உள்ள ஜீலையில், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவின்பேரில் திருவொற்றியூர் மண்டலத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, வடக்கு மண்டல கண்காணிப்பு பொறியாளர் சொக்கலிங்கம் தலைமையில், 14 வார்டுகளில் உள்ள மழைநீர் வெளியேற்றும் மோட்டார்கள் மற்றும் மரம் வெட்டும் கருவிகள் முறையாக பயன்படுத்தப்படும் நிலையில் உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்போது சில மரம் வெட்டும் கருவிகள் சங்கிலி உள்ளிட்ட உதிரிபாகங்கள் பழுதடைந்த நிலையில் பயன்பாடின்றி இருந்தது தெரியவந்ததை தொடர்ந்து, அவற்றை உடனடியாக சீரமைத்து, பருவமழை காலத்தில் அவசர தேவைக்கு தயாராக வைத்திருக்க வேண்டும் என கண்காணிப்பு பொறியாளர் சொக்கலிங்கம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வில் மண்டல அலுவலர் சங்கரன், மண்டல செயற்பொறியாளர்கள், வார்டு உதவி பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


