
தூத்துக்குடி அடுத்துள்ள மேற்கு சிலுவைப்பட்டி பகுதியில் அமைந்துள்ள சுனாமி குடியிருப்பில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றது. இந்த பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு இருந்த நிலையில் கடந்த 20 நாளுக்கும் மேலாக தொடர்ந்து குடிநீர் வழங்கப்படவில்லை என மக்கள் கூறியுள்ளனர். இது குறித்து ஊராட்சி மன்ற அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளிலும் புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, இந்த பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் தூத்துக்குடி ராமேஸ்வரம் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக மறியல் போராட்டம் நடத்திய பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் அரசுத்துறை அதிகாரிகள் மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்துள்ளனர். மேலும், நம்பி வாக்களித்த மக்களை இந்த அரசு ஏமாற்றி விட்டதாகவும், தங்களுக்கு முறையான குடிநீர் வழங்க வேண்டும் என்றும், இல்லை என்றால் போராட்டம் தொடர்ந்து நடத்தப்படும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

