
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமிற்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் வந்து ஒருவர் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த சிவப்பிரகாசம், விஜயலட்சுமி தம்பதியினருக்கு இரு மகன்கள் உள்ளனர். இவர் டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறார். கணவன்–மனைவிக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், அவருக்கு சொந்தமான சொத்துகளை அவரது மனைவி மற்றும் மகன்கள் அனுபவித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்ட அவரை தங்கை மகன் பராமரித்து வருவதால் தனக்கு ஏற்பட்டுள்ள மருத்துவச் செலவுகளை தனது சொந்த வீட்டில் வசித்து வருபவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், தன்னை பராமரித்து வரும் உறவினர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தக்கூடாது என உத்தரவிடக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க முடிவு செய்தார். இதையடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் குறைதீர்ப்பு முகாமிற்கு வந்த சிவப்பிரகாசம், அங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகளிடம் தனது கோரிக்கை தொடர்பான மனுவை அளித்தார். உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஆம்புலன்ஸில் வந்து ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த சம்பவம் அங்கு வந்த பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

