
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் மற்றும் பரிசோதனை மையங்கள் இயங்கி வருகின்றன. இங்கு பயன்படுத்தப்பட்டு வெளியேற்றப்படும் மருத்துவ கழிவுகளை கொட்டுவதற்கும் எரிப்பதற்கும் சட்டப்படி தடை உள்ளது. இவற்றை கண்காணிக்க பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்துத்துறை, உயிரியல் பலவகைமை வாரியம் உட்பட பல்வேறு துறைகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தாடிக்கொம்பு ரோடு ரயில்வே மேம்பாலத்தின் அடியில் மருத்துவ கழிவுகளை கொட்டி எரிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மருத்துவ கழிவுகள் கொட்டி எரிக்கப்படும் இடத்தை சுற்றி அரசு பெண்கள் கல்லூரி, அரசு பள்ளி, தனியார் மேல்நிலைப்பள்ளி, தனியார் மருத்துவமனையும் செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து, பொதுமக்கள், மாணவர்கள் அதிகம் நடமாடும் பகுதியில் மருத்துவக் கழிவுகள் எரிக்கப்படுவதால் நோய்த்தொற்று மற்றும் சுகாதார பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து புகார்கள் இருந்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


