
திருவொற்றியூரில் பாஜக கட்சியின் ஓ.பி.சி அணி சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சிக்கால சாதனைகளை விளக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக ஓ.பி.சி அணி மாநில தலைவர் டாக்டர் வீர திருநாவுக்கரசு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு முதலமைச்சர் நடிகை திரிஷாவுடன் பொது நிகழ்ச்சிகளில் செல்வது சரியல்ல என்றும், முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது வேதனைக்குரியது என்றும் தெரிவித்தார். தொடர்ந்து, தமிழ்நாட்டில் மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டி பேசிய அவர், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், பெண்களுக்கான நிதியுதவி, கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதந்த விவகாரம் மற்றும் திருவொற்றியூர் பாலப்பணி உள்ளிட்ட பிரச்சினைகளிலும் தமிழ்நாடு அரசை விமர்சித்த அவர், பொதுமக்களின் நலனுக்காக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

