








திண்டுக்கல் மாநகராட்சி எல்லை பகுதியில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் மற்றும் பரிசோதனை மையங்கள் இயங்கி வருகின்றன.
இங்கு பயன்படுத்தப்பட்டு வெளியேற்றப்படும் மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன மருத்துவ கழிவுகளை பொது இடங்களில் கொட்டவோ மருத்துவ வளாகத்திலேயே கொட்டி எரிக்கவோ கூட சட்டவிதிகள்படி அனுமதி இல்லை.
இவற்றை கண்காணிக்க உள்ளாட்சி அமைப்புகள் மட்டுமின்றி பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை , உயிரியல் பலவகைமை வாரியம் ( SBB ) , மாசு கட்டுப்பாட்டு வாரியம் உட்பட பல்வேறு துறைகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இது போன்று பல்வேறு துறைகளின் கண்காணிப்பின் கீழ் செயல்படும் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ பரிசோதனை கூடங்களில் இருந்து வெளியேற்றப்படும் மருத்துவ கழிவுகள் மாநகராட்சி எல்லைக்குள் பல இடங்களில் கொட்டிவிடுகின்றனர்.
இந்நிலையில் தாடிக்கொம்பு ரோடு ரயில்வே மேம்பாலத்தின் அடியில் மருத்துவ கழிவுகளை கொட்டி மர்மநபர்கள் எரித்து விடுவதாக தகவல் கிடைத்து நமது செய்திக்குழுவினர் அங்கு சென்று பார்த்த பொது தனியார் மெட்ரிகுலேசன் மேல்நிலை பள்ளி வளாகத்தின் மிக அருகிலேயே மருத்துவ கழிவுகளை கொட்டி எரித்துள்ளது தெரியவந்தது . அந்த இடத்தின் அருகிலேயே ரயில்வே தண்டவாளத்தின் இருபுறங்களிலும் அவ்வப்போது இதுபோன்று மருத்துவ கழிவுகளை கொட்டி எரித்ததற்கான எச்சங்கள் இன்னும் இருக்கின்றன.
இந்த மருத்துவ கழிவுகள் கொட்டி எரிக்கப்படும் இடத்தை சுற்றி அரசு பெண்கள் கல்லூரி, அரசு பள்ளி , தனியார் மேல்நிலைப்பள்ளி ஆகியவை உள்ளன மேலும் பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றும் உள்ளது.
இதே போன்று பழைய கரூர் ரோடு ரயில்வே சுரங்க பாதையின் மேல் பகுதியில் ரயில்வே இருப்புப்பாதையை ஒட்டியுள்ள புதர்களில் பயன்படுத்தப்பட்ட ஊசிகள் , இரத்த சேகரிப்பு குடுவைகள் , உட்பட பல்வேறு அபாயகரமான மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட்டுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கூட மதுரை பைபாஸ் தோமையார்புரம் அருகில் உள்ள குளத்தின் கரைப்பகுதியை ஒட்டி மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் , தலைமை சுகாதார பிரிவு அலுவலரிடம் உரிய ஆதாரங்களுடன் கூறியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
தினந்தோறும் பல்வேறு பயணியர் ரயில்களும் இந்த இடத்தை கடந்து செல்லும் நிலையில் இவ்வளவு தைரியமாக பொதுமக்களும் பள்ளி கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவியர்கள் உடல்நலம் பாதிக்கப்படும் என்றும் பெரும் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பாக இந்த செயல் அமையும் என தெரிந்தும் பொதுவெளியில் மருத்துவக்கழிவுகளை கொட்டி எரிக்கும் மர்ம கும்பலை இதுவரை எந்த துறையும் கண்டுகொள்ளாதது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.