திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே பெத்தூர் பகுதியில் முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் பிரகாசத்துக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இங்குள்ள கிணற்றில் 2 சடலங்கள் மிதப்பதை கண்ட பிரகாசம், உடனடியாக ஆலங்காயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் இருந்த 2 சிறுவர்களின் சடலங்களை மீட்டனர். பின்னர், உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஆலங்காயம் போலீசார், உயிரிழந்த சிறுவர்கள் யார்? அவர்கள் எவ்வாறு கிணற்றுக்குள் வந்தனர்? எப்படி உயிரிழந்தனர்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.