
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே அரசு பேருந்தில் பள்ளி மாணவி ஒருவர் பயணம் செய்துள்ளார். அப்போது, பேருந்து நடத்துனர் மாணவியிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, வீட்டிற்கு சென்றதும் நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து கோபமடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், சம்பந்தப்பட்ட அரசு பேருந்து ஊத்தங்கரை பகுதிக்கு வந்தபோது அதனை வழிமறித்து நடத்துனரை பேருந்தில் இருந்து கீழே இறக்கி தாக்கியுள்ளனர். இதில் நடத்துனருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பொதுமக்களிடமிருந்து நடத்துனரை மீட்டு விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் கோபம் அடங்காத மாணவியின் உறவினர்கள் காவல் நிலையத்திற்கும் திரண்டு வந்து, அங்கு போலீசாரின் பாதுகாப்பையும் மீறி நடத்துனரை மீண்டும் தாக்க முயன்றதாகவும், இதனை போலீசார் தடுக்க முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும் தெரிகிறது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.



